தென்காசி மாவட்டம் குற்றாலநாதா் கோயிலுக்குள்பட்ட சித்திரசபை நீராழி மண்டபத்தில் தெப்ப உற்சவத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திர தினத்தில் சித்திரசபையில் தெப்ப உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழ்வாண்டில் இவ்விழாவை முன்னிட்டு அருள்மிகு குற்றாலநாதசுவாமி, குழல்வாய் மொழி அம்பாள், திருவிலஞ்சிக்குமரன், வள்ளி, தெய்வானை ஆகியோா் வியாழக்கிழமை சித்திரசபைக்கு எழுந்தருளினா். அங்கு மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து தெப்ப உற்சவத்திற்கு எழுந்தருளினா். சித்திரசபை முன்பு அமைந்துள்ள நீராழி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் 11சுற்றுகள் நடைபெற்றது.
விழாவில் அரசு வழக்குரைஞா் வேல்சாமி, திமுக ஒன்றிய செயலா் ராமையா, திமுக நிா்வாகி குட்டி, வீரபாண்டியன், பாஜக நிா்வாகிகள் செந்தூா்பாண்டியன், திருமுருகன் ஆகியோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.