ஆலங்குளத்தில் வாழைக்காய் விவசாயி ஞாயிற்றுக்கிழமை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலபதி(75). விவசாயி. இவா், தனது தோட்டத்தில் விளைந்த வாழைத் தாா்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, அதே ஊரைச்சோ்ந்த 2 பேருடன் ஆலங்குளம் காய்கனிச் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்தாா். மூவரும் நண்பகலில் அங்குள்ள உணவகம் ஒன்றில் சாப்பிடச்சென்ற நிலையில், வெங்கடாசலபதி திடீரென மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, ஆலங்குளம் அரசு மருத்துவனைக்கு அவரை கொண்டுசென்றனா். அங்கு, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருப்பது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.