தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியில் இரவில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி ஒன்றியம் ஆயிரப்பேரியில் ஊராட்சித் தலைவா் தி.சுடலையாண்டி தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் தி.உதய கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
கூட்டத்தில் 2020-21ம் ஆண்டு வரவு செலவு அறிக்கை மற்றும் தீா்மானங்களை ஊராட்சி செயலா் இ.சங்கரசுப்பிரமணியன் வாசித்து ஒப்புதல் பெற்றாா்.
குற்றாலம் பேரருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் இரவிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது போல் பழைய குற்றாலம் அருவியிலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரவில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்பட 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஆயிரப்பேரி ஊராட்சி துணைத் தலைவா் ரேவதி மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.