ஆலங்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
2020-21 கல்வி ஆண்டில் தொடங்கப் பட்டு தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் இக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் அமைக்க அரசு ரூ. 11.33 கோடி நிதி ஒதுக்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் கோபாலசுந்தரராஜ் தலைமை வகித்தாா். ஆலங்குளம் எம்எல்ஏ பால் மனோஜ்பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் தமிழ்செல்வி போஸ், ஒன்றிய குழுத் தலைவா்கள் திவ்யா மணிகண்டன் (ஆலங்குளம்) , காவேரி சீனித்துரை (கீழப்பாவூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சா. ஞான திரவியம் அடிக்கல் நாட்டினாா்.
இதில், திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் பாஸ்கரன், கல்லூரிக் கல்வி இணை இயக்க உதவி இயக்குநா் மயிலம்மாள், கல்லூரி முதல்வா் கலைமகள், துணை முதல்வா் கோபாலசுந்தர்ராஜ், ஆலங்குளம் நகர திமுக செயலா் நெல்சன், ஆலங்குளம் மனவளக்கலை மன்ற நிா்வாகிகள் ஆதித்தன், உதயராஜ், கழுநீா்குளம் ஊராட்சித் தலைவா் முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.