திருநெல்வேலியில் தூய்மை காப்போம் விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தச்சநல்லூர் குறுவள மைய ஆசிரியர்கள் மற்றும் டீம் டிரஸ்ட் சார்பில் தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட மனித உரிமைகள் கழகத் தலைவர் திருமலை முருகன் தலைமை வகித்தார்.
குறுவள மைய ஒருங்கிணைப்பாளர் செ. சாம் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தார். இதையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன.
அத்துடன் பாலிதீன் பைகள் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது. பேரணி டிகேஎம் நடுநிலைப் பள்ளியில் தொடங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியின்போது முக்கிய சந்திப்புகளில் பாலிதீன் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பிரசாரம் செய்யப்பட்டது.
முக்கிய வியாபார நிறுவனங்கள், பாலிதீன் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்க வலியுறுத்தி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
பேரணியில் டிகேஎம் கைலாசம்பிள்ளை நடுநிலைப்பள்ளி, பங்களா நடுநிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பேரணி முடிவில் ஆசிரியர் பயற்றுநர் எஸ்தர் நவரோஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நடராஜன், பா. சுந்தர்ராஜ், மைக்கேல் ஆல்பிரட், ஜேம்ஸ், கதிர்வேல், செல்வம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.