திருநெல்வேலி நகரில் நியாயவிலைக் கடை கட்டுவதற்கு தேர்வு செய்த இடத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பெண்கள் சனிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
திருநெல்வேலி நகரம் கருவேலன்குண்டு தெருவில் 2 நியாயவிலைக் கடைகள் இயங்கி வந்தன. இக் கடைகளின் மூலம் மாநகராட்சி 54 ஆவது வார்டில் வசிக்கும் 2000 க்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வந்தனர். இந்த கடைகளின் கட்டடம் பழுதடைந்ததால், புதிதாக நியாயவிலைக் கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு நியாயவிலைக் கடைகள் கட்டுவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனிடையே நியாயவிலைக் கடைக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் கடை கட்டும் பணி தடை பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப் பகுதியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற திங்கள்கிழமை அன்று ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் சனிக்கிழமை கருவேலன் குண்டுத் தெருவில் நியாயவிலைக் கடைகள் கட்ட தேர்வு செய்த இடத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என வலியுறுத்தி பெண்கள் திடீரென காவல் நிலையத்தில் திரண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்ததை அடுத்து அவர்கள் புகார் மனு அளித்துவிட்டுச் சென்றனர்.