திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்கள் புதன்கிழமை பதவியேற்றனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக சு. திருநாவுக்கரசர் பதவியேற்ற பிறகு, மண்டலம், மாவட்ட வாரியாக தொண்டர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, கட்சியைப் பலப்படுத்தவும், தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும் மாநிலம் முழுவதும் மாவட்ட கமிட்டிகளுக்கு புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்து அறிவித்தார்.
இதன்படி, இம்மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி மாநகர், கிழக்கு, மேற்கு ஆகிய 3 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக கே. சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்டத் தலைவராக எஸ்.கே.எம். சிவகுமார், மேற்கு மாவட்டத் தலைவராக எஸ். பழனிநாடார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் பதவியேற்கும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் புதன்கிழமை பதவியேற்பு விழா நடைபெற்றது.
முன்னதாக இவர்கள், அலுவலக நுழைவு வாயிலில் உள்ள இந்திரா காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பதவியேற்றனர்.
இவர்களுக்கு மத்திய முன்னாள் அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், எம்பி ராமசுப்பு, மாவட்ட, மாநில நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் அமைக்க கட்சியை பலப்படுத்தும் வகையில் செயலாற்றுவதாக புதிய தலைவர்கள் உறுதியேற்றனர். விழாவில், மாவட்டம் முழுவதிலுமிருந்து காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.