திருநெல்வேலி மாவட்டத்தில் கோமாரி நோய் தாக்குதல் காரணமாக இம்மாதம் 8 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை கால்நடை சந்தைகளுக்கு தற்காலிக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் பனி மற்றும் குளிரின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் எனப்படும் கால்நோய், வாய்நோய் கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதிகளிலிருந்து கால்நடைகள் இம்மாவட்ட கால்நடை சந்தைகளுக்கு வருவதற்கும், அதன்மூலம் கோமாரிநோய் பரவ வாய்ப்பு உள்ளது.
வள்ளியூர், கடையம், நயினாகரம் , மேலப்பாளையம், பாவூர்சத்திரம், பாம்புகோவில் சந்தை, முக்கூடல், ரெட்டியார்பட்டி, திருவேங்கடம் ஆகிய இடங்களில் கூடும் வார கால்நடை சந்தைகள் உள்பட அனைத்து கால்நடை சந்தைகளும் சனிக்கிழமை (டிச. 8) முதல் இம்மாதம் 22-ஆம் தேதி முடியவோ அல்லது மறுஉத்தரவு வரும்வரையோ சந்தை கூடுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. கோமாரி நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் ஓரிடத்தில் அதிக அளவில் திரள்வதாலும், வேறு மாவட்ட, மாநில கால்நடைகள் சந்தைகளுக்கு வருவதாலும், நோய் பரவலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.