பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 532 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில், அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்தார். பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் சுரேஷ் வாகீல், கனரா வங்கியின் துணைப் பொது மேலாளர் பி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
ஓட்டம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 532 பேர் பங்கேற்றனர்.
வாலிபால் பயிற்றுநர் ப. வெங்கடேஷ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் குமரமணிமாறன், அமலராஜன், அமர்நாத், சத்யகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.