பாவூர்சத்திரம் பகுதியில் நடைபெறும் டெங்கு தடுப்புப் பணியை ஆட்சியர் புதன்கிழமை ஆய்வு செய்தார். அப்போது, கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழு இருந்ததற்காக வீட்டின் உரிமையாளருக்கு ஆட்சியர் ரூ. 500 அபராதம் விதித்தார்.
பாவூர்சத்திரம், சுற்றுவட்டாரப் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சுகாதாரத் துறை சார்பில் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வுப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், இப்பணிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி புதன்கிழமை ஆய்வு செய்தார். இங்குள்ள தனியார் பள்ளியை பார்வையிட்ட ஆட்சியர், மாணவர் - மாணவிகளிடம் டெங்கு குறித்துக் கேள்விகள் கேட்டார்; சரியான பதிலளித்தோரைப் பாராட்டினார். பின்னர், ஆவுடையானூர் ஊராட்சி, மாடியனூர் அரசுப் பள்ளியிலும், அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் அவர் ஆய்வு செய்தார். அப்போது, ராமர் என்பவரது வீட்டின் கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் டெங்கு கொசுப் புழு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ராமருக்கு ரூ. 500 அபராதம் விதித்த ஆட்சியர், கட்டுமானப் பணியை நிறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வுப் பணியின்போது, சங்கரன்கோவில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சோமசுந்தரம், கீழப்பாவூர் ஒன்றிய ஆணையாளர் ஜனார்த்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா, மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார், சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.