பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மாணவர்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அபராத கட்டணத்தைக் குறைக்க வேண்டும். ஆங்கில வழியில் தேர்வு எழுத கட்டாயப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்-மாணவிகள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தடியடி நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 10 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றதால் விடுமுறை அளிக்கப்பட்டது. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் மாணவர்-மாணவிகள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.