திருநெல்வேலியில் ஒரே நாளில் 4 இடங்களில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து மர்ம நபர்கள் ரூ. 1.50 லட்சத்தை திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், அங்குள்ள வங்கியில் இருந்து ரூ. 49 ஆயிரம் பணம் எடுத்து தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து விட்டு அலுவலகத்திற்கு சென்றாராம். சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் உடைத்து திருடிச் சென்றனராம். இதேபோல், பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சியில் ஒருவர் பணத்தை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பல் மருத்துவரிடம் சென்றாராம். திரும்பி வந்து பார்த்தபோது, பெட்டியில் இருந்த ரூ. 60 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
இதேபோல், மாநகரில் மேலும் 2 இடங்களில் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மொத்தம் ரூ. 1.50 லட்சம் திருடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். அடுத்தடுத்து ஒரே நாளில் 4 இடங்களில் ஒரே மாதிரியாக நிகழ்ந்த திருட்டுச் சம்பவம் குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.