திருநெல்வேலியில் ஆசிரியர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி முகாம் இரண்டாம் கட்டமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்-மாணவிகளை நீட் தேர்வில் பங்கேற்கச் செய்யும் வகையில் நிகழாண்டில் பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதோடு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்தவர்கள், இதர முதுநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களிலிருந்து மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய கேள்வி-பதில்கள், புதிய ஆய்வுகள் உள்ளிட்ட இணையவழித் தகவல்கள் குறித்து தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து புதன்கிழமையும் (செப். 12) பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.