திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருநெல்வேலி மாநகரில் கடந்த 3 நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யாமல் போக்குகாட்டி வந்தது. இரவிலும் கடுமையான வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். அக்னி நட்சத்திர காலத்துக்கு நிகராக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பகல் நேரத்தில் வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. செவ்வாய்க்கிழமை காலையிலும் வெயில் கடுமையாக இருந்தது. ஆனால், பிற்பகலில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. டக்கரம்மாள்புரம், மேலப்பாளையம், கே.டி.சி.நகர், தச்சநல்லூர், திருநெல்வேலி நகரம், வண்ணார்பேட்டை, திருநெல்வேலி சந்திப்பு, சீவலப்பேரி, பாளையஞ்செட்டிக்குளம் என அனைத்து பகுதிகளிலும் சுமார் 20 நிமிடங்கள் மழை நீடித்தது. தாழையூத்து, தென்கலம், சிதம்பரநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பாய்ந்தோடியது. திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் மரம் சரிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிள் சேதமானது.