பாபநாசம் கோயில் முன் மரக்கிளை முறிந்து விழுந்து 3 பேர் காயம்: போக்குவரத்து பாதிப்பு

பாபநாசம் சிவன் கோயில் முன் சாலையோரத்தில் இருந்த பழைமையான மரத்தின் கிளை செவ்வாய்க்கிழமை

பாபநாசம் சிவன் கோயில் முன் சாலையோரத்தில் இருந்த பழைமையான மரத்தின் கிளை செவ்வாய்க்கிழமை முறிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர். 3 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மின்கம்பம், மின்கம்பிகளும் சேதமடைந்ததோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பாபநாசம் சிவன் கோயில் முன் சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மருதமரம் உள்ளது. இதன் அடியில் புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 1 மணியளவில் அந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று திடீரென்று முறிந்து விழுந்தது. இதில், புறக்காவல் நிலையம் அருகே நின்றிருந்த பள்ளக்கால் புதுக்குடியைச் சேர்ந்த முத்து மகன் முருகன், சங்கரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் இருதயராஜ், சுத்தமல்லியைச் சேர்ந்த கருப்பன் மகன் சேகர் ஆகியோர் காயமடைந்தனர்.
இவர்கள் மூவரும் உடனடியாக சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், மரத்தின் கீழ் நிறுத்தப்பட்டிருந்த தலைமைக் காவலர் தவசு முருகையாவின் இருசக்கர வாகனம் உள்பட 3 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. அதோடு, அந்த வழியாகச் சென்ற மின்பாதையில் மரக்கிளை விழுந்ததில், மின்கம்பம் சாய்ந்ததோடு, மின்கம்பிகள் அறுந்து மின்சாரம் தடைபட்டது. மேலும், சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலையத்தினர், நிலைய அலுவலர் மில்டன் ஜெயக்குமார் தலைமையில் விரைந்து வந்து மரத்தை அறுத்து அகற்றினர். 
இதையடுத்து, மாலை 4.30 மணியளவில் போக்குவரத்து சீரானது. மின்வாரிய ஊழியர்களும் விரைந்து வந்து அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com