தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இம்மாதம் 27ஆம் தேதி பள்ளி மாணவர்-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வீரபத்ரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இம்மாதம் 27ஆம் தேதி பள்ளி மாணவர்- மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடைபெறுகிறது. போட்டி இரு பிரிவாக நடைபெறுகிறது. மழலை வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இளநிலைப் பிரிவாகவும், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை முதுநிலைப் பிரிவாகவும் போட்டி நடத்தப்படுகிறது.
இளநிலைப் பிரிவில் ஆண், பெண் என இரு பிரிவிலும் ஒற்றையர் பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடிப்போருக்கு முறையே ரூ.500, ரூ.250, ரூ.125 ரொக்கப் பரிசாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடிப்போருக்கு முறையே ரூ.1,000, ரூ.500, ரூ.250 ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
முதுநிலைப் பிரிவில் ஆண், பெண் என இரு பிரிவிலும் ஒற்றையர் பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடிப்போருக்கு முறையே ரூ.1,000, ரூ.500, ரூ.250 ரொக்கப் பரிசாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் முதல் 3 இடங்களைப் பிடிப்போருக்கு முறையே ரூ.2,000, ரூ.1,000, ரூ.250 ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
விருப்பமுள்ளோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) விவரங்களைப் பதிவு செய்யலாம். பதிவுசெய்ய செப்.26 கடைசி நாள். பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து படிக்கும் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் கிடையாது. போட்டியில் பங்கேற்போருக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்படாது என்றார் அவர்.