பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் அருகே நிகழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன் (35). ஆட்டோ ஓட்டுநரான இவர், வியாழக்கிழமை ஒரு பயணியை ஏற்றிக் கொண்டு ஜோதிபுரத்திற்குச் சென்றாராம். அங்கு இறக்கிவிட்ட பின்பு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம். டக்கரம்மாள்புரம் அருகே வந்தபோது ஆட்டோவும், அந்த வழியாக வந்த காரும் மோதியதாகக் கூறப்படுகிறது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.