பேட்டையில் கூலித் தொழிலாளியை கொலை செய்ய முயன்ற வழக்கில் பல்கலைக்கழக ஊழியருக்கு வெள்ளிக்கிழமை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பேட்டை சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி (55). கூலித் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மோகன் (50). இவர், திருநெல்வேலியிலுள்ள பல்கலைக்கழகத்தில் அலுவலக ஊழியராக பணி செய்து வருகிறார். இவர்களின் வீட்டுக் கழிவுநீர் செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இதனால், இருக் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 16.4.2014 அன்று இருவருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, மோகன் இசக்கிபாண்டியை அரிவாளால் வெட்டினாராம். பலத்த காயமடைந்த இசக்கிபாண்டி, சிகிச்சைப் பின்னர் வீடு திரும்பினார். புகாரின்பேரில், பேட்டை போலீஸார் மோகன் மீது வழக்குப் பதிந்தனர். இவ்வழக்கை விசாரித்த திருநெல்வேலி முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி ஹேமானந்தகுமார், குற்றஞ்சாட்டப்பட்ட மோகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.