பழுதான செல்லிடப்பேசியை மாற்றித் தராத நிறுவனம், பயனாளிக்கு இழப்பீடு வழங்க திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி நகரம் மாடத் தெருவைச் சேர்ந்தவர் மதிமாறன். இவர் தனது நண்பர் அருண்குமார் என்பவருக்கு கடந்த 2015இல் இணையதளம் மூலம் ரூ. 17 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசி ஒன்றை வாங்கிக் கொடுத்தாராம். செல்லிடப்பேசி சில மாதங்களில் பழுதானது. இதையடுத்து மேலப்பாளையத்தில் இயங்கி வரும் செல்லிடப்பேசி நிறுவன சேவை மையத்தை தொடர்பு கொண்டு, மதிமாறன் செல்லிடப்பேசியை மாற்றித் தருமாறு கேட்டாராம்.
மேற்கண்ட செல்லிடப்பேசி சேவை மையம் முறையான பதில் அளிக்கவில்லையாம். மேலும், செல்லிடப்பேசி நிறுவனம், இணையதள விற்பனை நிறுவனத்துக்கு புகார் தெரிவித்தும் பயனாளிக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து மதிமாறன், திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை நீதிபதி நாராயணசாமி, உறுப்பினர் சிவன்மூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். பழுதான செல்லிடப்பேசிக்கு பதிலாக பயனாளி மதிமாறனுக்கு புதிய செல்லிடப்பேசி ஒன்றினை அந்நிறுவனம் வழங்க வேண்டும். மேலும், இழப்பீடாக ரூ. 5 ஆயிரம், மனஉளைச்சலுக்கு ரூ. 3 ஆயிரம் என மொத்தம் ரூ. 8 ஆயிரமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.