செங்கோட்டையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஆட்டோவில் தப்ப முயன்ற 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, செங்கோட்டை மேலூரில் உள்ள இந்து அமைப்பைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதைக் கண்டித்து இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமை இரவு செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனிடையே, மறியலில் ஈடுபட்டவர்களின் வீடுகள் மீது இஸ்லாமிய இளைஞர்கள் ஒருசிலர் கல்வீச்சில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பதிலடியாக கல்வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்தி மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தடியடி சம்பவத்தைத் தொடர்ந்து, செங்கோட்டை மேலூர் பகுதியில் மின்சாரம் முற்றிலும் தடை செய்யப்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினர் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வன்முறையில் ஈடுபடும் நபர்களை விரட்டியடித்து வருகின்றனர். இதனிடையே, பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஆட்டோவில் தப்ப முயன்ற 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.