திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் பிரச்னைகளைத் தீர்க்க மக்களவையில் உரத்த குரலை எழுப்புவேன் என்றார் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியன்.
திருநெல்வேலி சேவியர் காலனியில் இருந்து தெற்குபுறவழிச்சாலை, வண்ணார்பேட்டை வழியாக கொக்கிரகுளத்தில் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்யும்போது அவர் பேசியது:
இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது ஊர்வலம் நடத்த திட்டமிட்டோம். அதற்கு அனுமதியில்லாததால் எளிமையாக பிரசாரத்தை முடித்துள்ளோம். இரட்டை இலை தோற்கக் கூடாது என்பதற்காக அதிமுக தொண்டர்கள் மிகவும் கடுமையாக உழைத்து வருகின்றனர். ஜாதி, மதம் பார்க்காமல் தமிழக மக்களின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நலத் திட்ட உதவிகளை முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் செய்தனர். அதை அதிமுக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மக்களிடம் இதை கொண்டு சேர்க்க வேண்டும். இன்னும் 2 நாள்கள் அதிகமான உழைப்பை அதிமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் தந்து வெற்றிக்கு உதவ வேண்டும்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் பிரச்னைகளைத் தீர்க்க மக்களவையில் உரத்த குரலை எழுப்புவேன். சேரன்மகாதேவி சட்டப்பேரவைத் தொகுதியில் செய்து கொடுத்ததைப் போல ஏராளமான திட்டங்களை இத் தொகுதிக்கு கொண்டு வர பாடுபடுவேன். அதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் அவர்.
இறுதிக்கட்ட பிரசாரத்தில் மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா, மாநிலங்களவை உறுப்பினர்கள் விஜிலாசத்யானந்த், எஸ்.முத்துக்கருப்பன், மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், மகளிரணிச் செயலர் சுவர்ணா, இளைஞரணிச் செயலர் மு.ஹரிஹரசிவசங்கர், தேமுதிக மாவட்டச் செயலர் முகம்மதுஅலி, சமக மாவட்டச் செயலர் சேவியர், தமாகா மாவட்டத் தலைவர் சுத்தமல்லி முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.