சங்கரன்கோவிலில் இரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
சங்கரன்கோவில் நகராட்சியில் 2 ஆவது வார்டிலுள்ள லெட்சுமியாபுரம் தெரு மற்றும் பாரதியார் தெரு ஆகிய பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் 50 க்கும் மேற்பட்டோர் ராஜபாளையம் பிரதானச் சாலையிலுள்ள குடிநீர் விநியோகம் செய்யும் நீரேற்றும் நிலையம் முன்பு திரண்டனர். குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து அவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.