திருநெல்வேலி மாவட்டம், இலஞ்சியில் உள்ள திருவிலஞ்சிக்குமாரர் கோயில் யானை வள்ளியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
இக்கோயிலுக்கு 2006ஆம் ஆண்டு கடம்பூர் ஜமீன்தார் 2 குட்டி யானைகளை நன்கொடையாக வழங்கினார். தெய்வயானை, வள்ளி எனப் பெயரிடப்பட்ட அந்த யானைகளில், தெய்வயானை 2008இல் உடல் நலம் குன்றி இறந்தது. இந்நிலையில், யானை வள்ளி (18) செவ்வாய்க்கிழமை திடீரென இறந்தது.
முறையாக பராமரிக்கப்படாததே யானையின் இறப்புக்குக் காரணம் என்றும், இதுதொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இலஞ்சி, குற்றாலம், காசிமேஜர்புரம் பகுதி பக்தர்கள் கோயில் முன் திரண்டனர். தென்காசி டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன், குற்றாலம் காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் வந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததால் மக்கள் கலைந்துசென்றனர். இதையடுத்து, கால்நடை மருத்துவ உதவி இயக்குநர் முருகையா, களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக வனவிலங்குகளின் மருத்துவர் சுகுமார் தலைமையில், பிரேத பரிசோதனைக்குப் பின்னர், கோயில் அருகேயுள்ள கோயிலுக்குச் சொந்தமான தோட்டத்தில் யானை வள்ளியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனையின்போது குற்றாலம் வனச் சரகர் ஆரோக்கியசாமி, வனவர் பாண்டியராஜ், காவல் ஆய்வாளர் சுரேஷ், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன், குற்றாலம் கோயில் செயல் அலுவலர் செல்வகுமாரி, பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில் செயல் அலுவலர் அருணாசலம், கோயில் செயல் அலுவலர் முருகன் ஆகியோர் இருந்தனர்.
முன்னதாக, வள்ளி யானையின் உடலுக்கு தென்காசி எம்எல்ஏ செல்வமோகன்தாஸ்பாண்டியன், அதிமுக புறநகர் மாவட்டப் பொருளாளர் சண்முகசுந்தரம், அதிமுக நிர்வாகிகள் சாமிநாதன், மயில்வேலன், திரளான பக்தர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.