மத்திய - மாநில அரசு எஸ்சி, எஸ்டி ஊழியர் நலச் சங்கம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மாவட்டத் தலைவர் எஸ். சுந்தரம், செயல் தலைவர் டி.எஸ். மணி ஆகியோர் தலைமை வகித்தனர். துணைத் தலைவர்கள் க. செல்வரத்தினம், பெ. வீரமோகன், கு. மாரிச்செல்வம், எம். பாலுச்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலர் ஏ.முத்துச்சாமி வரவேற்றார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் பூ. கோபாலன் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் இடஒதுக்கீடு, நேரடி நியமனம், வயது வரம்பு ஆகியவற்றை ரத்து செய்துவிட்டு சட்ட விரோதமாக பதவி உயர்வு செய்யப்பட்டோருக்கான ஆணைகளை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ். சுடலைக்கண்ணு ஆர்ப்பாட்டத்தை முடித்துவைத்தார். மாவட்ட பொருளாளர் சேவா. ராஜேந்திரன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.