சீவலப்பேரி துர்காம்பிகை கோயிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை: போக்குவரத்து போலீஸார் உபசரிப்பு
தலைக்கவசம் அணிந்தபடி இரு சக்கர வாகனத்தில் சென்றோருக்கு, திருநெல்வேலி மாநகர போக்குவரத்துக் காவல்துறை, அன்னை தெரசா பொது நல அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் மரக்கன்று, லட்டு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சர்வதேச நண்பர்கள் தினத்தையொட்டி, தலைக்கவச விழிப்புணர்வு நிகழ்ச்சி திருநெல்வேலி சந்திப்பு மேம்பாலம் அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர போக்குவரத்து காவல் துறை, அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாநகர உதவி காவல் ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து, தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அவர் இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கி பாராட்டினார். தலைக்கவசம் அணியாதவர்களுக்கும் இனிப்பு வழங்கி, தலைக்கவசம் அணிந்து பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. சிறுவர்-சிறுமியருக்கு இனிப்பு, சிறிய பந்து, எழுதுகோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இது குறித்து செய்தியாளர்களிடம் உதவி காவல் ஆணையர் கூறியது: தற்போது 50 சதவீத உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் நடக்கிறது. இந்த நிலை மாறவேண்டும். விபத்தில்லா நெல்லையை உருவாக்க இந்த முயற்சியை எடுத்துள்ளோம். விரைவில் இது நிறைவேரும். எங்களின் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில், திருநெல்வேலி நகர காவல் உதவி ஆணையாளர் சதீஷ் குமார், திருநெல்வேலி நகர போக்குவரத்து ஆய்வாளர் சந்திரகுமார், போக்குவரத்து காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.