பாபநாசம், அகஸ்தியர் அருவிப் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி, இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், கல்லுப்பட்டியைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சத்தியமூர்த்தி(27). இவர், தனது நண்பர்களுடன் குற்றாலத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாராம். அங்கு அருவிகளில் குளித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை பாபநாசத்துக்கு வந்தனர். அகஸ்தியர் அருவிக்குக் குளிக்கச் சென்றவர்கள் அகஸ்தியர் கோயில் முன் உள்ள ஆற்றுப் பகுதியில் குளித்துள்ளனர். அப்போது, சத்திய மூர்த்தி ஆழமான பகுதிக்குச் சென்றதில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சத்தியமூர்த்தி உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருட்டியதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.