பாளையங்கோட்டையில் தேசிய அளவிலான சாராஸ் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மத்திய, மாநில அரசுகள், ஊரக கைவினைஞர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவவும் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் 12 நாள்கள் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
கண்காட்சியை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்ததோடு, அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 140 பேருக்கு மானியங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, உதவி திட்ட அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
கண்காட்சியில் 9 மாநிலங்கள், 29 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினரால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடை வகைகள், கைத்தறி சேலைகள், வீட்டு அலங்கார பொருள்கள், எம்ப்ராய்டரி பொருள்கள், சுடுமண் பொருள்கள், கற்றாழை நார் உற்பத்தி பொருள்கள், பனை ஓலை பொருள்கள், அலங்கார சணல் பைகள், மகளிருக்கு தேவையான துணிகள், செயற்கை ஆபரணங்கள், விளையாட்டு பொருள்கள், மூலிகை மருந்துகள், இயற்கை உணவு வகைகள் உள்பட பல்வேறு பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.