ஆடி பௌர்ணமி 8ஆம் திருவிழாவை முன்னிட்டு பேட்டை திரிபுரசுந்தரி அம்மனுக்கு பச்சை சாத்தி வீதி உலா நடைபெற்றது.
திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் ஆடி பௌர்ணமி திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கட்டளைதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. 8ஆம் திருவிழாவை முன்னிட்டு பேட்டை சைவ வேளாளர் உறவின் முறை சங்கம் சார்பில் அம்மனுக்கு பச்சை சாத்தி அலங்காரம் செய்யப்பட்டது.
காலை 7 மணிக்கு அம்மனுக்கான அபிஷேக பொருள்கள் பேட்டை வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. காலை 9 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடந்து 12 மணிக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும், பிற்பகல் ஒரு மணிக்கு அன்னதானமும் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு அம்மன் வீதி உலா பேட்டையின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.