அம்பாசமுத்திரம் சின்ன சங்கரன்கோவில் அருள்மிகு கோமதி அம்பாள் சமேத அருள்மிகு சங்கரலிங்க சுவாமி திருக் கோயிலில் ஆடித்தவசு தெப்ப உற்சவம் புதன்கிழமை நடை பெற்றது.
இக்கோயிலில் ஆக. 3 ஆம் தேதி ஆடித் தவசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆக. 12இல் காலை 9 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 7.30 மணிக்கு இடப வாகனத்தில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றன. ஆக. 13இல் காலை 4.30 மணிக்கு அபிஷேகம், தீபாரா தனையை தொடர்ந்து வெள்ளிச் சப்பரத்தில் அம்பாள் தவசுக்கு எழுந்தருளலும், மாலை 6 மணிக்கு சங்கரநாராயணர் தவசுக் காட்சியும், சங்கரலிங்க சுவாமி அம்பாளுக்கு இடப வாகனத்தில் காட்சி தரிசனமும், இரவு 9 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது.
புதன்கிழமை சங்கரலிங்க சுவாமி கோமதியம்பாள் தெப்பத் திருவிழா நடைபெற்றது. மாலையில் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சுவாமி- அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளினர். பின்னர், வேதபாராயணங்கள் முழங்க தெப்பத்தில் 11 சுற்று வலம் வந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வியாழக்கிழமை (ஆக. 15) இரவு 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்பத் திருவிழாவும், சுவாமி-அம்பாள் வீதிவுலாவும் நடைபெறும்.