திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவர்-மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
போட்டியை காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தொடக்கிவைத்தார். 6, 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "இந்திய சுதந்திரப் போராட்டம்' என்ற தலைப்பிலும், 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "எனது பார்வையில் சுதந்திர இந்தியா' என்ற தலைப்பிலும், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "இந்தியா 2020' என்ற தலைப்பிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைச்சேர்ந்த 130 பேர் போட்டியில் பங்கேற்றனர். இதில், சிறப்பிடம் பெறுவோருக்கு, அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.