கடையம் அருகே பாப்பான்குளத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
கடையம் அருகே பாப்பான்குளம் பிரதான சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலையை செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரம் புதன்கிழமை காலையில் தெரியவந்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர்கள் முருகன், மாரியப்பன், மாநில சிறுபான்மை பிரிவு நிர்வாகி அ. அமீர்கான், முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன், மாவட்ட கலைதுறைத் தலைவர் அழகுதுரை உள்ளிட்டோர் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்து வந்த அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர்ஜாஹிர் ஹூசைன், கடையம் காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமி மற்றும் போலீஸார், கட்சி நிர்வாகிகளுடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும்கலைந்து சென்றனர்.