தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 16ஆவது மாநில மாநாடு திருநெல்வேலியில் சனிக்கிழமை (ஆக. 17) தொடங்குகிறது. தொடர்ந்து இம் மாதம் 19 ஆம் தேதி வரை மாநாடு நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) திருநெல்வேலி திட்டத் தலைவர் பீர்முகம்மதுஷா, திட்டச் செயலர் வண்ணமுத்து ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: பாளையங்கோட்டை அருகே குலவணிகர்புரத்தில் உள்ள கணேஷ் மஹாலில் சனிக்கிழமை (ஆக.17) காலை 9 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். சிஐடியு அகில இந்திய பொதுச் செயலர் தபன்சென் தொடக்கவுரையாற்றுகிறார். பொதுச் செயலர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், சிஐடியு அ.செளந்தரராசன் உள்ளிட்டோர் பேசுகின்றனர்.
மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக. 19) மாலை 4 மணிக்கு மகாராஜநகர் மின்வாரிய அலுவலகம் முன்பு பேரணி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு பாளையங்கோட்டை காதுகேளாதோர் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. சிஐடியு மாநில பொதுச் செயலர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேச உள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.