திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட தியாகராஜநகரில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் சுகி பிரேம்லா பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, இளநிலை பொறியாளர் ஜெயகணபதி, உதவி வருவாய் அலுவலர் மணிகண்டன், கண்காணிப்பாளர் மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடிநீர், வாருகால் உள்ளிட்ட வசதிகள் கோரி 50-க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர். தியாகராஜநகர் குடியிருப்போர் அபிவிருத்தி நலச்சங்கத் தலைவர் வாகைகணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல, திருநெல்வேலி மாநகராட்சி 40ஆவது வார்டு பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், திருநெல்வேலி மண்டல உதவி ஆணையர் சொர்ணலதா மனுக்களைப் பெற்றார். சுகாதார அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் முருகன், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் சங்கரன், சுகாதார மேஸ்திரி சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.