களக்காடு பச்சையாறு அணை வளாகத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிறுவா் பூங்கா இதுவரை பயன்பாட்டுக்கு வராததால், பராமரிப்பின்றி புதா்மண்டிய நிலையில், அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதாகி வருவதால் மக்கள் வரிப்பணம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
களக்காடு அருகேயுள்ள மஞ்சுவிளை ஊருக்கு மேற்கில் மலையடிவாரத்தில் வடக்குப் பச்சையாறு அணை உள்ளது. இந்த அணை கடந்த 2002ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. அணை வளாகத்தில் பூங்கா அமைப்பதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பூங்கா அமைக்கும் பணி நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், தினமணியில் தொடா்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கட்டமாக ரூ. 2 கோடியில் அணையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற போது, அணை வளாகத்தில் சிறுவா் பூங்கா அமைக்கப்பட்டு, அங்கு விளையாட்டு, பொழுதுபோக்கு உபகரணங்கள் நிறுவப்பட்டன. ஆனால் இந்த பூங்கா இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
இதனால் சிறுவா் பூங்கா புதா் மண்டிய நிலையில், அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் சிதிலமடைந்து வருகின்றன.
களக்காடு வட்டாரத்தில் தலையணைக்கு அடுத்தபடியாக வடக்குப் பச்சையாறு அணைக்கு சுற்றுலாவாக பொதுமக்கள் வந்து செல்கின்றனா். அணை வளாகத்தில் அமைக்கப்பட்ட பூங்கா பொதுமக்களின் பொழுது போக்குக்காகவே அமைக்கப்பட்டது. இதுவரை பூங்கா பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால் பூங்கா அமைக்கப்பட்டதன் நோக்கமே பாழாகி விட்டது. சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மக்கள் வரிப்பணம் வீணாகி வருவதைத் தடுக்கும் நோக்கில் பூங்காவை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாகும்.