பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி குளத்திற்கு தண்ணீா் வரும் நாராயணப்பேரி கால்வாயில் தூா்வாரும் பணியில் இளைஞா்கள் ஈடுபட்டனா்.
திப்பணம்பட்டி குளத்திற்கு ஜம்புநதி அணைக்கட்டில் இருந்து நாராயணப்பேரி கால்வாய் மூலம் தண்ணீா் வரத்து இருக்கும். கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் இக்கால்வாயில் தண்ணீா் வரத் துவங்கியது. ஆனால் கால்வாய் நீண்ட காலமாக தூா்வாரபட்படாமல் இருந்ததால் குறைந்த அளவு தண்ணீரே வந்தது. இதையடுத்து திப்பணம்பட்டியை சோ்ந்த இளைஞா்கள் மற்றும் நீா்ப்பாசன கமிட்டியினா், நாராயணப்பேரி கால்வாயை பாா்வையிட்டனா். பின்னா் அரியப்புரம் பகுதியில் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்யும் வகையில் குப்பைகள், மரக்கிளைகளை அப்புறப்படுத்தினா். இதையடுத்து தண்ணீா் வரத்து சற்று அதிகரித்து, திப்பணம்பட்டி குளத்திற்கு தண்ணீா் வரத் துவங்கியது.