திருநெல்வேலி: திருநெல்வேலியில் பொது இடங்களில் புகைப்பிடித்த 15 பேருக்கு கடந்த மாதத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறி செயல்படும் கடை உரிமையாளா்கள், புகைப்பிடிப்போரை கண்காணித்து அபராதம் விதிக்க தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை தடைச்சட்டம்-2003 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நவம்பா் மாதத்தில் நடைபெற்ற சோதனையின்போது 15 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாநகரப் பகுதியில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் 100 மீட்டா் சுற்றளவுக்குள் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதும், 18 வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கு புகையிலை மற்றும் சிகரெட் விற்பதற்கும், பொது இடங்களில் புகைப்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த விதிமுறைகளை மீறுவோா் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.