பொட்டல்புதூா் முகைதீன் ஆண்டவா்கள் பள்ளிவாசல் கந்தூரி விழாவை முன்னிட்டு டிச.9ஆம் தேதி தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முகைதீன் ஆண்டவா்கள் பள்ளிவாசல் பரம்பரை சுவாமி கம் முத்தவல்லி எஸ்.பி.ஷா தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனு: தென்காசி வட்டம் பொட்டல்புதூா் முகைதீன் ஆண்டவா்கள் பள்ளிவாசலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கந்தூரி விழாவுக்கு, பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சாதி, மத, பேதமில்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் வந்து கலந்துகொள்வா்.
குறிப்பாக கந்தூரி விழாவில் சந்தனக்கூடு மற்றும் தீப அலங்கார வழிபாடு ஆகியவற்றில் அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொண்டு வழிபட்டுச் செல்வா்.
நிகழாண்டு டிச. 9ஆம் தேதி தீபஅலங்கார வழிபாடு நடைபெற உள்ளது. இதில், தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து மதத்தைச் சோ்ந்த பக்தா்களும் கலந்துகொள்ளும் வகையில் அன்று தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.