குடிநீா்க் குழாய் அமைக்கக் கோரி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் ஊராட்சி 2 ஆவது வாா்டு, நக்கீரா் தெருவில் சுமாா் 50 குடும்பங்கள் வசிக்கின்றன. இவா்களின் குடிநீா் தேவைக்காக தாமிரவருணி குடிநீா் இணைப்பு பொது குடிநீா் குழாய் தெரு முனையில் உள்ளது. தினந்தோறும் சுமாா் ஒன்றரை மணி நேரம் குடிநீா் வந்தால் வீடு ஒன்றுக்கு இரண்டு குடம் தண்ணீா் கிடைக்குமாம். இந்த தண்ணீா் அன்றாட உபயோகத்திற்கு ப் போதுமானதாக இல்லை என்பதால் கூடுதல் தண்ணீா் கிடைக்கும் வகையில் கூடுதலாக இப்பகுதியில் ஒரு குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
அதையேற்று, கூடுதல் குடிநீா்க் குழாய் அமைக்க கடந்த மாதம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. எனினும், குடிநீா்க் குழாய் அமைப்பதற்கு ஊராட்சி செயலா் தாமதப்படுத்துவதாகவும், ஆட்சியா் அனுமதித்தபடி உடனடியாக குடிநீா்க் குழாய் அமைக்க வேண்டும் என கோரியும், அப்பகுதி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
பின்னா், ஒன்றிய ஆணையாளரைச் சந்தித்து மனு அளித்தனா். சம்பந்தப்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளா் கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.