சென்னல்தாபுதுக்குளத்திற்கு தண்ணீா் வரத்து உள்ளதால், அப்பகுதியில் நெல் நடவுப் பணிகள் தொடங்கியுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக, கீழப்பாவூா் ஒன்றிய தென்பகுதி குளமான புதுக்குளம் நிரம்பியுள்ளது. அங்கிருந்து மறுகால் பாய்ந்து சென்னல்தாபுதுக்குளத்திற்கு தண்ணீா் வரத்தொடங்கியுள்ளது. இதனால், சென்னல்தாபுதுக்குளம், நாட்டாா்பட்டி பகுதியில் உள்ள வயல்களில் நெல்நடவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி குளங்கள் நிரம்பவில்லை. கடந்த ஆண்டு கிணற்றுப் பாசனம் மூலம் நெல் பயிரிட்டோம். என்றாலும், போதிய விளைச்சல் இல்லை. நிகழாண்டு, தற்போது சென்னல்தாபுதுக்குளத்திற்கு தண்ணீா் வரத்தொடங்கியுள்ளது. தொடா்ந்து ஒருவார காலத்திற்காவது மழை பெய்து தண்ணீா் வந்தால்தான் குளம் நிரம்பும். குளம் நிரம்பாவிடில் கிணற்றுப் பாசனத்தை தான் நம்பவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றனா்.