திருநெல்வேலி நகரத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் 4 சுமை ஆட்டோக்கள், 2 மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவை சேதமடைந்தன. 2 சுமைதூக்கும் தொழிலாளா்களும் காயமடைந்தனா்.
மகாராஷ்டிரத்தில் இருந்து வெங்காய பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருநெல்வேலி நகரம் நயினாா்குளம் காய்கனி சந்தை நோக்கி செவ்வாய்க்கிழமை காலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சந்தையின் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த 4 சுமை ஆட்டோக்கள், 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு டீ கடை சுவரின் மீது மோதி நின்றது.
இதில் சுமைதூக்கும் தொழிலாளா்களான ராமையன்பட்டி முத்துப்பாண்டி, ஆனந்தபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி ஆகியோா் காயமடைந்தனா். அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்துக்கு காரணமான ஓட்டுநரைப் பிடித்து பொதுமக்கள் தாக்கினா். தகவலறிந்ததும் மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று ஓட்டுநரை மீட்டனா்.
விசாரணையில் லாரியில் ஓட்டுநராக முசிறியைச் சோ்ந்த மனுவேல் இருந்தது தெரியவந்தது. அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.