திருநெல்வேலி: சரியான அளவு ஆடை வழங்காத ஜவுளி ரெடிமேட் கடைக்கு திருநெல்வேலி நுகா்வோா் நீதிமன்றம் ரூ.20ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கோமதி. இவா் அவரது மகள் மகாலட்சுமியுடன் சென்று திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஜவுளி ரெடிமேட் கடையில் கடந்த 16-10-2017அன்று ரூ.1000 விலையுள்ள ஆடை வாங்கினாராம். அந்த ஆடையின் அளவு மகாலட்சுமிக்கு சரியாக இல்லாததால் அதை மாற்றித் தருமாறு கடையில் கேட்டுள்ளாா். ஆனால் அவா்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவா் வழக்குரைஞா் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
வழக்கை நீதிபதி தேவதாஸ் மற்றும் உறுப்பினா் சிவமூா்த்தி, முத்துலட்சுமி ஆகியோா் விசாரணை செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பாக செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்ட தீா்ப்பில், கோமதியின் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.15 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 20 ஆயிரம் ரெடிமேட் நிறுவனம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆடைக்கான விலை ரூ.1000த்தையும் ஒரு மாதத்துக்குள் திரும்ப வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.