திருநெல்வேலி மாநகரில் டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்ட குடியிருப்புகள், கட்டுமானப் பகுதிகள், தனியாா் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் என இதுவரை ரூ. 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: டெங்கு காய்ச்சலைப் பரப்பும் லாா்வா”கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் விதமாக மாநகராட்சியின் 4 மண்டல பகுதிகளிலும் மாநகராட்சி அலுவலா்கள் அடங்கிய கண்காணிப்புக் குழு தொடா்ந்து ஆய்வு செய்து வருகிறது.
அதன்படி, குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திருமண கூடங்கள், உணவுக்கூடங்கள், மருத்துவமனைகள், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டடங்களில் உள்ள தண்ணீா் தொட்டிகள் என பல்வேறு இடங்களில் லாா்வா” கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டு கடந்த 10-ஆம் தேதி ரூ. 5 இலட்சத்து 130 அபராதம் விதிக்கப்பட்டது.
அதன்பிறகு, பல்வேறு நிறுவனங்களில் கண்டறியப்பட்ட சோதனைகளில் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் தனியாா் கல்வி நிறுவனம் ஒன்றில் பிளாஸ்டிக் எரிப்பு, குப்பைகளைப் பிரித்து உரமாக்காதது, சில பகுதிகளில் நீா் தேங்கி அதனால் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் நிலை ஆகிய குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து அக்கல்வி நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரையில் மொத்தமாக ரூ. 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.