நுண்ணீர் பாசனத் திட்டத்தை சரியாக செயல்படுத்தாத இரண்டு நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாசன நீரை சேமிக்க உதவும் நுண்ணீர் பாசனத் திட்டம் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் செலுத்தவேண்டிய நுண்ணீர் பாசன அமைப்புகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை தமிழக அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் நுண்ணீர் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் 41 நுண்ணீர் பாசன நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் "எவர்கிரீன் இரிகேசன்' மற்றும் "பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிட்' ஆகிய இரு நுண்ணீர் பாசன நிறுவனங்களும் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே, அந்நிறுவனங்களுக்கு குறிப்பிடும்படி முன்னேற்றம் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் அந்நிறுவனங்கள்நுண்ணீர் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இதையடுத்து, மாநில அளவிலான ஒப்புதல் குழுவின் அனுமதியுடன் அந்நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் அளிக்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் யாரும் "எவர்கிரீன் இரிகேசன்' மற்றும் "பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிட்' ஆகிய நிறுவனங்களை அணுக வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.