குற்றாலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவரின் உடலை வாங்க பெற்றோர் மறுத்த நிலையில், போலீஸார் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், குட்டகம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (18). தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று வந்த இவரும், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த ஜனவரி மாதம் மாயமாகினர்.
இந்நிலையில் குற்றாலத்தில் ஒரு தங்கும் விடுதியில் கார்த்திக் ராஜா மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரது உறவினர்கள் மாணவர் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி உடலை வாங்காமல் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் தரப்பில் கார்த்திக் ராஜாவின் பெற்றோரிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், உடலை பெற்றுச் செல்ல மறுப்பு தெரிவித்து விட்டனர்.
இதனால் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி, போலீஸ் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவின்பேரில் பாளையங்கோட்டை வெள்ளக்கோயில் மயானக்கரையில் கார்த்திக்ராஜாவின் உடலை போலீஸார் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்தனர்.