தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்குகள் எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மக்களவைத் தொகுதி வாக்குகள் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன. இங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தென்காசி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் இக்கல்லூரியில் வைக்கப்படும். வாக்குகள் எண்ணுவதற்கு மற்றும் தகவல் தெரிவிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஆய்வின்போது, கோட்டாட்சியர் சௌந்திரராஜ், கல்லூரி முதல்வர் திரிபுரசுந்தரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சாந்தி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் தங்கராஜ், காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.