நான்குனேரி அருகே சாலை விபத்து: ஆந்திரத்தைச் சேர்ந்த பெண் சாவு
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 50 பேர், தமிழகத்தில் உள்ள திருத்தலங்களுக்கு ஒரு பேருந்தில் சுற்றுலா வந்தனர். இவர்கள், கன்னியாகுமரி செல்வதற்காக, நான்குனேரி-கன்னியாகுமரி புறவழிச் சாலையில் உள்ள சிறுமளஞ்சி இசக்கியம்மன் கோயில் அருகே பேருந்தை நிறுத்திவிட்டு, சமையல் செய்துகொண்டிருந்தனராம். அப்போது, நாயுடுபார்வதி (59) என்பவர் சாலையைக் கடந்து செல்ல முயன்றார். அப்போது, நாகர்கோவிலில் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், பலத்த காயமடைந்த அவரை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இச்சம்பவம் குறித்து நான்குனேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.