ராகு பெயர்ச்சியையொட்டி, திருநெல்வேலியில் உள்ள பல்வேறு கோயில்களிலும் ராகு பகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.
பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரர் கோயிலில் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த ராகு பகவானை ஏராளமான பெண்கள் தரிசனம் செய்தனர். பாளையங்கோட்டை பெருமாள் மேல ரத வீதியில் உள்ள பகவதியம்மன், கருமாரியம்மன் கோயிலோடு இணைந்த ராகு பகவான் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமமும் நடைபெற்றன.
பேட்டை அருகே சங்காணியில் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோதபரமேஸ்வரர்- சிவகாமி அம்பாள் கோயில் உள்ளது.
இங்கு ராகு பெயர்ச்சியையொட்டி காலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள், நண்பகலில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பேட்டை, குன்னத்தூர், சுத்தமல்லி, திருநெல்வேலி நகரம், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.