திருநெல்வேலியில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களில் ஒரு பகுதியினருக்கு ஓய்வூதியத் தொகை வழங்காததைக் கண்டித்து திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக பொது மேலாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் மற்றும் வாரிசுதாரர் நல அமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க துணைத் தலைவர் எட்டப்பன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் பி.முத்துகிருஷ்ணன், பொருளாளர் பழனி, நிர்வாகி சிவதாணுதாஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தொடர்ந்து பொதுமேலாளரை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர். பொதுமேலாளர் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.