விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் வரலாற்று ஆவணங்களை கல்வெட்டுகளாகப் பதிவு செய்ய வேண்டும் என்றார் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர்- தலைவர் இரா.அதியமான்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதித்தமிழர் பேரவை முழுஆதரவு அளித்துள்ளது. அந்தக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வோம்.
சேலம் மாவட்டம், சங்ககிரியில் நடைபெற்ற அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாட்டின்போது அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்தி வழங்க திமுக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். விடுதலைப் போராட்ட வீரரான தளபதி பொள்ளானுக்கு மணிமண்டபம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபம் புனரமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது ஏமாற்று வேலையாகும். அருந்ததியர் மக்களின் வாக்குவங்கியை திசைதிருப்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒண்டிவீரன் மணிமண்டபத்தின் வெளியே உள்ள வளாகத்தில் பீடம் அமைத்து குதிரையுடன் கூடிய ஒண்டிவீரன் சிலையை நிறுவ வேண்டும். அவரது வரலாற்று ஆவணங்களை கல்வெட்டுகளாகப் பதிவு செய்ய வேண்டும். மணிமண்டபத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தை முழுமையாகப் பயன்படுத்தி பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது நிர்வாகிகள் ரவிக்குமார், முத்துக்கிருஷ்ணன், அருந்ததி அரசு, திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலர் கலை.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.