தமிழக -கேரள மாநிலங்களின் எல்லையான ஆரியங்காவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வனப்பகுதிக்குள் ஏற்பட்ட காட்டுத் தீயில் அரிய வகை மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
வனப்பகுதியில் தேக்கு மரங்கள் அடந்துள்ள பகுதிக்கு வேகமாக தீ பரவியதில், மலை உச்சிவரை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் கேரள வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி ஆரியங்காவு தர்ப்பகுளம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அரிய வகை மரங்கள் எரிந்து நாசமாகின. தற்போதும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயின் உக்கிரத்துக்கு காடுகளில் வாழும் அணில், சிறுத்தை, காட்டுப்பன்றி, மிளா, உடும்பு உள்ளிட்ட விலங்கினங்களும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.